மருத்துவர் உள்பட பலரை தாக்கி செல்போன் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவர் ஒருவரை தாக்கி செல்போன் பறித்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகரில் வசித்து வரும் விவேக் பட்டேல், அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 11 ஆம் தேதி அதிகாலை சாந்தோம் நெடுஞ் சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை தாக்கி செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். செல்போனை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு போராடியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியதில், அலறித் துடித்து அவர் சாலையில் விழுந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அன்று இரவு மட்டும் மேலும் இரண்டு பேரிடம் கைவரிசையை காட்டிவிட்டு தப்பியுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவர் விவேக் பட்டேலின் மனைவி அஞ்சலி அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் மண்ணடி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரதீப், திருவல்லிக்கேணி, தீர்த்தாராயப்பன் தெருவை சேர்ந்த அஜய் மற்றும் ஐஸ் அவுசை சேர்ந்த மனோஜ் ஆகிய 3 பேரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருத்துவரை தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை பார்ப்போம்....