கோடை காலம் என்பதால், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு மற்றும் வேளாண் நிலங்களுக்குள் புகுந்து பசியாறி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோட்டத்திற்குள் புகுந்து, அங்கிருந்த மாமரத்தில் மாங்காய்களை பறித்து தின்றுள்ளது.
இதனை கண்டதும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் பாகுபலி காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்ட தொடங்கியுள்ளனர்.
அப்போது பாகுபலி யானையின் உடல் மீது பட்டாசுகள் விழுந்து வெடித்துள்ளது.
இதில் பாகுபலி காட்டு யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என வன விலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், விதிகளை மீறி காட்டு யானை மீது சக்திவாய்ந்த பட்டாசுகளை வீசிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.