கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கியது.நாகை மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமாக பூசப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் குழந்தை இயேசு திருத்தலத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இயேசுவின் இறுதிக்கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பிரார்த்தனை பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சாம்பல் புதனையொட்டி பங்குதந்தை பிச்சை முத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.