காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த மகள் உட்பட நான்கு பேரை பொலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்து உள்ள தலையால் நடந்தான் குளத்தை சேர்ந்த செல்வகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். மூத்த மகள் கார்த்திகா தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம்
ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் செல்வகுமார் மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாக கூறி குடும்பத்தினர் இறுதி சடங்கில் ஈடுபட்டுள்ளனர். இதில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் செல்வகுமாரின் மூத்த மகள் அதே பகுதியை சேர்ந்த கந்தவேல் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கு செல்வகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆத்திரமடைந்த மகள், தாயுடன் சேர்ந்து தனது காதலனை இரவில் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் வாயில் துணியை வைத்து திணித்து, நெஞ்சில் ஏறி காதலன் மிதித்து கொலை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து தாய் பாக்கியலெட்சுமி, மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி மற்றும் காதலன் கந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.