திருச்செந்தூரில் 100 கல்யாணம்... கட்டுக்கடங்கா கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் சசுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆடி முடிந்து, ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் திருச்செந்தூர் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.