நடுரோட்டில் துணை முதல்வர் காரில் திடீர் சோதனை - தொற்றிய பரபரப்பு திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை, கொடைரோடு டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டு, மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தார். கொடைரோடு டோல்கேட் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலினின் காரை நிறுத்தி, தீவிர சோதனை மேற்கொண்டனர். காரின் பின்பகுதியைத் திறந்து பைகள் மற்றும் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். சோதனைக்குப் பிறகு அவரது வாகனம் மதுரை நோக்கிச் சென்றது.