#rahulgandhi #nirmalasitharaman ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியாவின் தரவுகளும், விவசாயிகளின் நலன்களும் தாரைவார்க்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டிய இருந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவுடனான இந்திய அரசின் வர்த்தக ஒப்பந்தத்தை ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், கடந்த 2013ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு, உலக வர்த்தக அமைப்பில் மேற்கொண்ட பாலி ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி உண்மையிலேயே விவசாயிகளை விற்றது யார்? என தமக்குத் தெரியும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார். மேலும், முந்தைய காங்கிரஸ் அரசு பாகிஸ்தானுடனான உறவில் இந்தியாவின் இறையாண்மையை நீர்த்துப்போகச் செய்ததாக எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அவர் சுட்டி காட்டினார். மேலும், இந்த பட்ஜெட்டில் தரவு மையங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் மூலம், இந்தியர்களின் தரவுகள் இந்தியாவிலேயே பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இரட்டை இலக்கத்தில் இருந்த உணவுப் பணவீக்கம், தற்போது 2 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு பதப்படுத்துதல் துறைக்கு நான்காயிரத்து 64 கோடி ரூபாயும், உயர் மதிப்புள்ள விவசாயத்திற்கு 350 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.