17-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடர் இதுவாகும். மக்களவையில், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண் ஜேட்லி, ராம் ஜெத்மலானி, சுஷ்மா சுவராஜ், குருதாஸ் குப்தா உள்பட 10 பேருக்கும், மாநிலங்களவையில் 5 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 13ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், அயோத்தி, ரபேல் வழக்கு தீர்ப்புகள், தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம், வேலையின்மை, பொருளாதார நிலை, மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம், மோட்டார் வாகன மசோதா, மருத்துவர்கள் பாதுகாப்பு மசோதா உள்பட 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.