வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு வசதி வேண்டி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி வழங்க வேண்டும் என முன்னாள் தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே தபால் வாக்கு வசதி வழங்கப்படுகிறது. ஆனால் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருப்பதால், தங்கள் சொந்த ஊர்களில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும், டெல்லியில் வசிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக கூறி, வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.