#sssivasankar | #SouthernRailway தென்னக ரயில்வே மீது அமைச்சர் குற்றச்சாட்டு புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக முறையான அறிவிப்பு தென்னக ரயில்வே இடமிருந்து, மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சில புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த 19ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தென்னக ரயில்வேயை தொடர்பு கொண்ட பின்னரே, மின்னஞ்சல் மூலம் விவரங்கள் பெறப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் நேரங்களில் 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 30 நிமிட இடைவெளியில் மட்டுமே ரயில் சேவை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் இறுதி தேர்வு காலக்கட்டத்தில், ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க, இந்த வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 314 பேருந்துகளுடன், கூடுதலாக 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.