செங்கல்பட்டு அருகே ரயில்வே லெவல் கிராசிங் மூடப்பட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு - அரக்கோணம் தண்டவாளத்தில் உள்ள லெவல் கிராசிங்கை அப்பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனிடையே புதிதாக சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாக கூறி ரயில்வே லெவல் கிராசிங்கை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ரயில்வே கேட் அருகில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அப்பகுதி மக்கள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.