கொரோனா சிகிச்சைக்கு உதவும் உள்நாட்டு தயாரிப்பான 2டிஜி மருந்தின் விலை 990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் தடுத்து, நோயில் இருந்து அவர்களை குணப்படுத்த உதவும் 2-டிஜி மருந்தை, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மே 17ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த 2-டிஜி மருந்து சிறப்பான பலன்களை அளிப்பதாகவும், இந்த மருந்தை பெற பல மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இரண்டாவது தொகுப்பாக பத்தாயிரம் பாக்கெட் 2டிஜி மருந்து சந்தைக்கு வந்துள்ளது.
இந்திய அளவில் இதன் வணிக ரீதியான விற்பனை ஜூன் மாத மத்தியில் தொடங்கும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து வரிகளையும் சேர்த்து 2டிஜி மருந்தின் விற்பனை விலை 990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 2டிஜி மருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுடர் வடிவில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் 2-டிஜி மருந்தை, தண்ணீரில் கரைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை என 7 நாட்கள் வரை உட்கொண்டால் கொரோனா நோய் குணமாவது கண்டறியப்பட்டுள்ளது.