சுப்பிரமணிய பாரதி நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பாரதியார் பிறந்த நாளையொட்டி தமிழில் பதிவிட்டுள்ள அவர், 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அவர் கூறியதாகவும், மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். மகாகவி பாரதியார் என்று அழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்வதாகவும், தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் என்றும், அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.