ஐ. என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், கடந்த ஆகஸ்டு மாதம் 21 - ம் தேதி, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ வழக்கில், ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்த போதிலும், சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஒருவேளை, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால், திஹார் சிறையில் இருந்து ப. சிதம்பரம் வெளியே வர வாய்ப்பு உள்ளது. இதனிடையே, குடல் நோயால் அவதிப்பட்டு வரும் ப. சிதம்பரம், 9 கிலோ எடை குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.