படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தியா, சீனா உறவு - ஜெய்சங்கர்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் இரு நாடுகளின் உறவு மேம்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2020-க்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் மூலமே இரு நாடுகளுக்கு இடையே நிலையான உறவைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடக்கம், விசா நடைமுறைகள் எளிதாக்கம், கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் எல்லை வர்த்தகம் மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது என்றார்.
இருப்பினும், வர்த்தகச் சமநிலையின்மை, சந்தை வாய்ப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மை போன்ற முக்கிய வணிகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
நடப்பு ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையில், இந்தியாவின் முயற்சிகளுக்குச் சீனா அளித்து வரும் ஆதரவிற்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.