இஸ்ரோ ரகசியங்களை வெளிநாட்டிற்கு அளித்ததாக கூறி, விஞ்ஞானி நம்பி நாராயணன் இஸ்ரோவிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று இறுதியில், நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு, பொய்யானது என, தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவருக்கு நஷ்ட ஈடாக 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என கேரள அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ஏற்று, கேரள அரசு அவருக்கு அந்த நிதியை வழங்கியது. அதற்கடுத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் 10 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நம்பி நாராயணன் திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதையொட்டி, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழு சிபாரிசின் அடிப்படையில், நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேரள அரசு வழங்கியது.