ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பிக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி, அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அவர் சமர்ப்பித்துள்ள மனுவில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, தற்போது பாஜகவில் இணைந்துள்ள 7 உறுப்பினர்களும் தார்மீக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.