கூகுள் மேப்பை நம்பி சென்றதால் விபரீதம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில், கூகுள் மேப்பை நம்பிச் சென்ற கார் ஒன்று சாக்கடையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தத்ரியிலிருந்து கிதௌருக்கு திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த கார், கூகுள் மேப்ஸ் காட்டிய குறுக்கு வழியைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. அந்தப் பாதையில் இருந்த ஆழமான சாக்கடையில் கார் விழுந்ததில், தண்ணீரின் அழுத்தத்தால் கதவுகள் திறக்க முடியாமல் பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்