சமூக ஊடக வருவாயில் நேர்மையான வருவாய் பகிர்வு அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் வருவாயை, உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு நேர்மையான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்க மாநாட்டில் பேசிய அவர், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் தகவல்களை உருவாக்குபவர்களுக்கு வருவாயில் உரிய பங்களிப்பை வழங்க புதிய நடைமுறை அவசியம் என்று வலியுறுத்தினார். அனுமதி இன்றி ஒருவரின் முகம் அல்லது குரலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Deepfake தகவல்கள், சமூக கட்டமைப்பையே சிதைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஊடகத் தளங்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சரின் பேச்சு, விரைவில் சமூக ஊடகங்களுக்கான புதிய வருவாய் பகிர்வு மற்றும் AI ஒழுங்குமுறை விதிகள் வரக்கூடும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.