தற்போதைய செய்திகள்

உலகை உலுக்கிய இலங்கை இறுதி யுத்தம் ..14 ஆண்டுகள் கடந்தும் தொடரும் சர்ச்சை

தந்தி டிவி

உலகை உலுக்கிய இலங்கை இறுதி யுத்தத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2009-ஆம் ஆண்டு மே மாதம், 18ம் தேதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறி, அவரது காயம்பட்ட உடலை அந்நாட்டு ராணுவம் ஊடகங்களில் காட்டியது. அதற்கு மறுநாள் போர் முடிந்துவிட்டதாகவும் அறிவித்தது இலங்கை அரசு. இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து 14 ஆண்டுகள் முடிந்துவிட்டாலும், பிரபாகரன் மரணம் பற்றியோ, மரபணு பரிசோதனை பற்றியோ எழுந்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை... இந்த நிலையில்தான், இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர்கள் சந்திப்பின் போது, முன்னுக்குப்பின் முரணான பதில் ஒன்றை கூறியுள்ளார்....

"இறுதி யுத்தம் நடந்த காலத்தில், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அமைச்சராக நான் இருந்தேன். அதனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் பற்றியோ, மரபணு பரிசோதனை தொடர்பாகவோ எனக்கு எதுவும் தெரியாது. அவர் விசயத்தில், என்ன நடந்தது என்பது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும்" என்று கூறி தனக்கும், யுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என்பது போல பேசியிருக்கிறார் சிறிசேன.

முன்னாள் அதிபரின் இந்த பேச்சு மொத்த இலங்கையையும் சற்று அதிர்ச்சி கொள்ள செய்திருக்கிறது. ஏனெனில், மைத்திரிபால சிறிசேன விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு நிகழ்வொன்றில் பேசும்போது கூட "இலங்கை இறுதி யுத்தத்தின் போது எங்களுக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது, முக்கியமானவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, நான் வெளியில் இருந்து போரை கவனித்து வந்தேன்" என கூறியிருந்தார்.

பிரபாகரனின் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மரபணு பரிசோதனை முடிவை இப்போதுவரை அந்த நாட்டு ராணுவம் வெளியிடவில்லை. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதும் ராணுவம் அதை தர மறுத்துவிட்டது. தகவலறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டு பெற, அந்த நாட்டின் பத்திரிகையாளர்கள் முயற்சித்து பார்த்தனர், ஆனாலும் பிரபாகரன் மரணம் பற்றிய தகவலை சஸ்பென்சாகவே வைத்திருக்கிறது அந்த நாட்டு அரசு. இந்த நிலையில்தான், முன்னாள் அதிபரின் இந்த திடீர் பின்வாங்குதல், பிரபாகரன் மரணத்தில் மீண்டும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.....

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு