ஓரின சேர்க்கையாளரான பெண்கள் இருவரும் சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவர் தமது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவில் வசித்து வந்த நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த மாணவி பாத்திமா நூரா என்பவருடன் நெருங்கி பழகினார். அப்போது நெருக்கம் அதிகமாகி அவர்களுக்கு இடையே ஓரினச்சேர்க்கையாளர் உறவு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கேரளா திரும்பி கோழிக்கோட்டில் உள்ள தாமரை சேரி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் தோழி பாத்திமா நூராவை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில், ஆதிலா நஸ்ரின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார் . இதனை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததால் அதற்கு அனுமதி வழங்கி, கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.