கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், விசாரணை அறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில், உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, உடற்கூறாய்வு ஆய்வின்போது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யு டியூப் இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்கு, 27 முகநூல் பக்கங்களில் உள்ள பதிவுகளை நீக்கவும், முடக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்திய நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, போலீசார் முடிவெடுக்கலாம் என அனுமதியளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.