சிறை நிர்வாகத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சிறைத்துறையின் புதிய வழிகாட்டு நெறிமுறைக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது.
விசாரணை கைதி தொடர்பாக மதுரையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணையின் போது, கைதிகளுக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறைக்குள் தவறு செய்யும் கைதிகளுக்கு சிறு தண்டனைகள் கொடுக்க நேர்ந்தால், அவர்களிடம் எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற எழுத்துப்பூர்வ ஆவணத்தை கொடுக்க வேண்டும் எனவும், தண்டனை விவரத்தை கைதியின் பதிவேடுகளிலும் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து சிறைகளிலும் பின்பற்ற உத்தரவிட்டனர்.