"நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்ளும் அபாயம்" - லண்டன் நீதிமன்றத்தில் நிபுணர்கள் தகவல்

x

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளதாக லண்டன் ஐகோர்ட்டில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பி சென்றார்.

சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டது.

அப்போது, சிறையில் நிரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மனஅழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.

அதேநேரம் இந்தியாவில் நிரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து, இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியளித்தார்.

நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் அப்போது வாதிட்டார்.

இந்த வாரம் 3 நாட்கள் நடைபெறும் விசாரணைக்கு பிறகு, நிரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பலாமா, வேண்டாமா என்பது குறித்து இரு நீதிபதிகள் குழு தீர்ப்பு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்