இந்தோனேசியாவில் தொடரும் விமான விபத்து - அடிக்கடி விபத்துக்குள் சிக்குவது ஏன்...?

விமான விபத்துக்களுக்கு மையமாக பார்க்கப்படும் இந்தோனேசியாவில் விபத்துக்கள் அடிக்கடி நேரிடுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
இந்தோனேசியாவில் தொடரும் விமான விபத்து - அடிக்கடி விபத்துக்குள் சிக்குவது ஏன்...?
x
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்டது.இங்கு மக்கள் பெரும்பாலும் பயணத்திற்கு வான்வழி பயணத்தை நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது.90 களுக்கு பிறகு விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிப்பால் சிறு விமான நிறுவனங்களும் உள்நாட்டு விமானங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுகின்றன, இயக்கவும் செய்கின்றன.இப்படி 2003 ஆம் ஆண்டு தன்னுடைய வான் பயணத்தை தொடங்கிய நிறுவனம்தான் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனம்.இந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-500 விமானம்தான் கடந்த சனிக்கிழமையன்று விபத்துக்குள்ளானது,ஜகார்தாவில் இருந்து பொண்டியானாக் நோக்கி  56 பயணிகள், 6 சிப்பந்திகளுடன் சென்ற விமானம் மாயமானதாகவும், பின்னர் விபத்துக்குள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதுபோன்று இந்தோனேசியாவில் அடிக்கடி விமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.இதுவரையில் அங்கு 104 விபத்துக்கள் நேரிட்டுள்ளது என்றும், இதில் 2 ஆயிரத்து 353 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.விமானம் அடிக்கடி விபத்தில் சிக்குவதற்கு இயற்கையை தவிர்த்து பல காரணிகள் சொல்லப்படுகிறது விமானங்களின் மோசமான பராமரிப்பு, விமானிகளுக்கு போதிய பயிற்சியின்மை, தகவல் தொடர்பில் குளறுபடி, தொழில்நுட்ப குறைபாடு, வான் கட்டுப்பாட்டு மைய சிக்னல் குளறுபடி என பல காரணங்கள் அடுக்கப்படுகிறது.இதனால் அமெரிக்கா இந்தோனேசிய விமானங்கள் இயங்குவதற்கு 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் தடை விதித்துள்ளது.இதேபோன்று 2007ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய யூனியனும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது.இப்போது அங்கு நிலைமை மாறுபட்டு இருந்தாலும், பிரச்சினைகள் தொடர்வதாகவே கூறப்படுகிறது.தற்போது விபத்துக்குள் சிக்கிய போயிங் 737-500 ரக விமானம், பயணத்திற்கு பாதுகாப்பானது என வரலாறு கொண்டிருந்தாலும், ஏற்கனவே 4 விபத்துக்களை சந்தித்து இருக்கிறது.இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானம் நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, 26 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும், நவீன மாற்றங்கள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.இதுபோக இந்தோனேசிய கடல்பகுதியில் அடிக்கடி இடி, மின்னலுடன் மழை உள்ளிட்ட வானிலை மாற்றங்களும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன. சனிக்கிழமை விமானம் வெடித்ததை பார்த்ததாக கூறும் மீனவர்கள், மழையால் தங்களால் பாகங்கள் எதையும் பார்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த விமானம் விபத்துக்கு உள்ளனது என்பதை கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னரே தெரியவரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்