பனிப்புயல் : ஸ்தம்பித்த ஸ்பெயின் - 50 ஆண்டில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு

பனிப்புயலால் ஸ்பெயின் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.
பனிப்புயல் : ஸ்தம்பித்த ஸ்பெயின் - 50 ஆண்டில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு
x
திரும்பிய இடமெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போன்ற காட்சி... ஆங்காங்கே சாலைகளில் நிற்கும் வாகனங்கள்... பொத்தென்று முறிந்து விழும் மரக்கிளைகள்... மழைபோல மணி மணியாய் கொட்டும் பனி... ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கடந்த நான்கு நாட்களாக நீடிக்கும் நிலை இதுதான்... 

ஸ்பெயினை புளோமினா என்னும் பனிப்புயல், பாரபட்சம் பாராமல், பதம் பார்த்து வருகிறது. இந்த பனிப்புயலின் தாக்கத்தால், ஒட்டுமொத்த ஸ்பெயினும் ஸ்தம்பித்துப்போய், செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

தலைநகர் மேட்ரிட்டில் வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு பனிப்புயலையே பார்த்ததில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர் அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள்... 

பனிப்புயலின் அச்சுறுத்தலால் மேட்ரிட், கியூயன்கா, டோலிடோ, அல்பசெட் உள்ளிட்ட நகரங்களுக்கு, அபாயகரமான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 

வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோன் நகரம், மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைந்துபோய் உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் 20 இன்ச் உயரத்துக்கு குவிந்து காணப்படுகிறது பனி... 

இங்குள்ள அனைத்து சாலைகளையும் பனி மூடிய நிலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே முடங்கி நிற்கின்றன. தொடர்ந்து பொழியும் பனியால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு விமானம் மற்றும் ரயில் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. 

பனியில் சிக்கிய வாகனங்களில் இருப்பவர்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், பனிப்புயலுக்கு இதுவரை அங்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 

இதனிடையே, மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு, ஸ்பெயின் அரச குடும்பமும், அந்நாட்டு அரசும் வலியுறுத்தி உள்ளன. 

ஆனால், ஸ்பெயின்வாசிகள், வீதிகளில் குவிந்து, உற்சாகமாக பனியில் விளையாடி, பொழுதைப் போக்கி வருகின்றனர். 

கடந்த மாதம் அமெரிக்காவை பனிப்புயல் அச்சுறுத்தியது. தற்போது அது ஸ்பெயினை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சமீப காலமாக வெயில், மழை, பனி என எதுவாக இருந்தாலும், இயல்புக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. 

இவற்றுக்குப் பின்னால், பருவநிலை மாற்றம், மறைந்து நிற்கும் நிலையில்  ஸ்பெயின் பனிப்புயல்,... பருவநிலை மாற்றத்தை நினைவுபடுத்தும் ஓர் எச்சரிக்கை மணி தான்... 

Next Story

மேலும் செய்திகள்