சென்னை வந்தார் குடியரசுத்தலைவர் - ஆளுநர் முதல்வர் நேரில் சென்று வரவேற்பு
தமிழகம் வந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று மைசூர் திரும்பிய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, அங்கிருந்து சென்னை வந்தடைந்தார். விமானநிலையம் வந்த அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குடியரசுத்தலைவருக்கு திருக்குறளின் ஒடியா மொழியாக்கத்தை அன்பளிப்பாக முதலமைச்சர் வழங்கினார். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகை சென்ற குடியரசுத்தலைவர் அங்கு ஓய்வெடுக்கும் நிலையில், நாளை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், ஆளுநர் மாளிகை வரை 10 அடிக்கு ஒரு காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.