அப்பாவை கொன்ற பிரபல ரவுடி.. 22 ஆண்டு காத்திருந்து பகை முடித்த மகன்.. மண்ணில் சரிந்த சென்னை 'செய்யா'
சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி செய்யா என்கிற செழியன். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபாகரன் என்பவரையும், அவரது சகோதரர் பாபுவையும் முன்விரோதமாக காரணமாக கொலை செய்ததால், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட செழியன், நன்னடத்தை பெயரில் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் தனியே வசித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் வெல்டராக பணியாற்றி வந்த செழியனை, பணி முடிந்து வீடு திரும்பும் போது மர்மகும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், செழியனை கொன்றது, அவர் 22 வருடங்களுக்கு முன்பாக கொலை செய்த பிரபாகரனின் மகன் சதீஷ்குமார் என்பதும், தந்தையை பறிகொடுத்த ஆத்திரத்தில் 22 வருடம் காத்திருந்த அவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து செழியனை பழிதீர்த்ததும் தெரியவந்தது. விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், சதீஷ்குமார் உட்பட நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்