தூங்கும் போது வீட்டை கொளுத்திய கொடூரன் - உயிரை கையில் பிடித்து மனைவியோடு வெளியே குதித்த கணவன்

x

ராமநாதபுரம் அருகே, முன்விரோதம் காரணமாக, வீட்டுக்கு தீ வைத்து எரித்ததில், மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அழகமடை பகுதியை சேர்ந்தவர் 85 வயதான மூதாட்டி பாப்பு... இவரது கணவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மூதாட்டி தனது மூத்த மகன் ராசுவின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

மூதாட்டியின் சகோதரி மகனான சித்திரவேலு என்பவரது வீடு, ராசுவின் வீட்டுக்கு அருகே உள்ளது.

மூதாட்டியின் இரண்டாவது மகன் துரைராஜ் என்பவருக்கும்,

உறவினரான சித்திரவேலுவுக்கும் இடையே, இடப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், துரைராஜ் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் சித்திரவேலு...

இடப்பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், ஒரு கட்டத்தில் துரைராஜை பழிவாங்க நினைத்த சித்திரவேலு, அடுத்தகட்டமாக எடுத்த முடிவுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தம்பியிடம் இருந்த முன்பகை காரணமாக, அவரது அண்ணனை பழிவாங்க திட்டம் தீட்டிய சித்திரவேலு, அதற்காக ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார்.

அதாவது, துரைராஜ் வீட்டிற்கு அருகே வசிக்கும் ராசு, தனது மனைவி மற்றும் தனது தாயுடன் வீட்டில் அசந்து தூங்கியுள்ளார். அதிகாலை வேளையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாததைக் கண்ட சித்திரவேலு, ராசு வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவுகளை வெளிப்புறமாக தாழிட்டுள்ளார். பின்னர் சாவகாசமாக வீட்டை சுற்றி விறகு கட்டைகளை வைத்துவிட்டு நெருப்பு பற்ற வைத்துள்ளார்.

நெருப்பு வைத்தது தான்தான் என சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அந்த வீட்டின் அருகே உள்ள தனது வீட்டில் உள்ள சிலிண்டரை திறந்து, தீ வைத்துவிட்டு அங்கிருந்து சித்திரவேலு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில் வீடு எரிந்த நிலையில், பதற்றத்துடன் கண்விழித்த ராசு, தனது மனைவியுடன் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உயிர் பிழைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவரது தாய் பாப்பு, தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், வீட்டை கொளுத்தி விட்டு தப்பியோடிய சித்திரவேலுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், வீட்டை கொளுத்தி விட்டு தப்பியோடிய சித்திரவேலுவை, போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்