அதிகாலையில் ரயிலில் ஏறிய நபர்.. விடிய விடிய கேட்ட அழுகை சத்தம்.. விசாரித்ததில் தெரியவந்த உண்மை

x

மனைவியிடம் சண்டை போட்டு 3 மாத கைக்குழந்தையுடன் மதுரை ரயில் நிலையம் வந்திறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது...

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் அடுத்த அம்பாத்துரை ரயில் நிலையம் வந்தடைந்த போது அங்கு 3 மாத கைக்குழந்தையுடன் ஒருவர் ஏறினார். ரயிலில் ஏறியது முதல் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. இதை கவனித்த சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது அலி ஜின்னா, மதுரை ரயில் நிலையத்தில் இளைஞர் இறங்கியதும் பின் தொடர்ந்து சென்று அவரிடம் ரயில்வே போலீசார் உதவியுடன் விசாரித்த போது, அந்த நபர் பெயர் பாக்கியராஜ் என்பது தெரிய வந்தது... திண்டுக்கல் காந்தி கிராமம் அடுத்த சாமியார்பட்டியைச் சேர்ந்த அவருக்கும் கங்கா தேவி என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்று கடந்த டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், மனைவியுடன் சண்டை போட்டதால் அதிகாலை 3 மணிக்கு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாக்கியராஜ் அம்பாத்துரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வந்ததாகக் கூறியுள்ளார்... பசியில் கதறிய குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் இருந்தவரிடம் குழந்தையை மீட்டு அவரது மனைவியை தொடர்பு கொண்டு அது அவர்களது குழந்தை தானா என உறுதி செய்து, தாயை உடனடியாக மதுரை ரயில் நிலையம் வரவழைத்து குழந்தை ஒப்படைக்கப்பட்டது... அதிகாலை 3 மணியில் இருந்து பசியோடு குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த சமூக ஆர்வலர் முகமது அலி ஜின்னா ரயில் நிலையம் வந்த தாய்மார்களிடம் பேசி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்து பசியாறச் செய்துள்ளார்... அவருக்கும் தாய்ப்பால் கொடுத்த பெண்ணிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்