நீட் மசோதா தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இன்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இன்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தினார். ஆனாலும், இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆளுநரை திரும்பப் பெறக்கோரி வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், நீட் தேர்வு மசோதாவை ஆளுநர், சபாநாயகருக்கு திருப்பி அனுபப்பினார். இதுதொடர்பாக ஆலோசிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.
Next Story