டிக் டாக்கை தொடர்ந்து SMULE மூலம் மோசடி: மோசடி மன்னன் சிக்கியது எப்படி?

டிக் டாக்கை தொடர்ந்து இப்போது ஸ்மியூல் செயலியில் உள்ள இளம்பெண்களை குறிவைத்து பழகி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்...
டிக் டாக்கை தொடர்ந்து SMULE மூலம் மோசடி: மோசடி மன்னன் சிக்கியது எப்படி?
x
இசை ஆர்வம் கொண்டவர்கள் சங்கமிக்கும் ஒரு இடமாக இருந்தது ஸ்மியூல் செயலி... டிக் டாக் செயலியை போலவே ஸ்மியூல் செயலிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

தங்களின் இசை திறமையை வெளிப்படுத்த ஸ்மியூல் செயலியின் பக்கம் வந்த இளம்பெண்களை குறிவைத்து ஒருவர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

கல்லூரி மாணவி ஒருவர், சென்னை சைபர் க்ரைம் பிரிவில் அளித்த புகார் தான் அந்த மோசடி மன்னனை சிக்க வைத்திருக்கிறது. ஸ்மியூல் செயலியில் அறிமுகமான நபர், தன்னிடம் பழகி பின்னர் தன்னை காதலிப்பதாக கூறி 17 ஆயிரம் ரூபாய் பணம், 13.5 சவரன் நகைகளை பறித்ததாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், அந்த மோசடி மன்னன் திருமுல்லைவாயலை சேர்ந்த லோகேஷ் என தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது புகார் அளித்த கல்லூரி மாணவி உட்பட கிட்டத்தட்ட 15 பெண்களிடம்  லோகேஷ், மோசடி செய்தது தெரியவந்தது. ஸ்மியூலில் தன்னுடன் டூயட் பாடும் பெண்களிடம் நட்பாக பழகும் லோகேஷ், அவர்களின் செல்போன் நம்பர் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொள்வார்.

ஒரு கட்டத்தில் அவர்களை காதலிப்பதாக கூறும் லோகேஷ், அவசர தேவை அது இது என கூறி பணத்தை கறப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.  அவ்வாறு பணம் தராவிட்டால் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து  வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட லோகேஷின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவர் நிஷாந்த், விமலேஷ் என்ற பொய்யான பெயர்களில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

புதுச்சேரி மற்றும் மலேசியா வாழ் பெண்களையும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட லோகேஷ் +2 முடித்துவிட்ட பி.ஏ. முதலாம் ஆண்டுடன் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்

அப்பா கூலி வேலையும்,  அம்மா வீட்டு வேலையும் செய்து வரும் நிலையில் உல்லாச வாழ்க்கை வாழ பெண்களை ஏமாற்றும் வித்தையை கற்று அதை செயல்படுத்தி வந்துள்ளார், லோகேஷ்

யாரிடமும் நேரடியாக சென்று நகையோ, பணத்தையோ லோகேஷ் பெற்றது இல்லையாம்.. பணத்தை வங்கிகள் மூலமாகவும், நகைகளை கொரியர் மூலமாகவும் ஏமாந்த பெண்கள் லோகேஷூ அனுப்பி வைத்துள்ளனர்.

லோகேஷிடம் இருந்து 72.2 கிராம் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான லோகேஷ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரித்தால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்ற விபரம் முழுமையாக தெரியவரும்..



Next Story

மேலும் செய்திகள்