விநாயகர் சதுர்த்தி - சிலைகள் வைக்க தடை
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருந்த போதிலும் தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் சந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு நடத்திய சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் , அவற்றை இந்து சமய அறநிலையத்துறை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் நாகை வெளாங்கண்ணியில் கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவின் போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story