குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது - ஆந்திரா சென்று கைது செய்தது தனிப்படை

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை, தமிழக தனிப்படை போலீசார், ஆந்திராவில் கைது செய்துள்ளனர்.
குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது - ஆந்திரா சென்று கைது செய்தது தனிப்படை
x
ஒரு குழந்தையை ஒரு பெண் கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பலரும் கொதித்து போனார்கள். காரணம் அந்த குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண் அடிப்பதை அத்தனை எளிதாக யாரும் கடந்து செல்ல முடியாத அளவிற்கு குழந்தையின் அழுகுரல் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்கும் வரை வீடியோவை ஷேர் செய்யுங்கள் என வீடியோ பரவி வந்த நிலையில் உடனடியாக இது போலீசாரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த துளசி என்ற பெண் தான் அவர் என தெரியவந்தது. அந்த பெண்ணின் கையில் வதைபடும் அந்த குழந்தை அவரின் 2வது குழந்தை என்பதும் தெரியவந்தது. துளசியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் சித்தூர். துளசியின் கணவர் வடிவழகன். இவர்களுக்கு 2016ல் திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள். இதில் 2 வயது சிறுவன் தான் இந்த துன்பத்தை அனுபவித்த சிறுவன். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினைகள் வரும் போதெல்லாம் தன் 2 வயது மகனை அடித்து துன்புறுத்துவது துளசியின் வழக்கமாக இருந்துள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே துளசியின் நடவடிக்கைகளில் வித்தியாசம் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை அதிகம் இருந்துள்ளது. அப்போதெல்லாம் தன் செல்போனை எடுத்து கேமராவை ஆன் செய்து வைத்துக் கொண்டு குழந்தையை துன்புறுத்தி வீடியோ எடுத்து வைத்துக் கொள்வாராம்.

வீடியோவில் இருக்கும் காட்சிகள் எல்லாம் கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையை கொடூரமாக தாக்கியதில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளது, இந்த பிரச்சினையால் ஆத்திரமடைந்த வடிவழகன், தன் குழந்தைக்கு சிகிச்சை கொடுத்த கையோடு மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள அவரின் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, தான் பெற்ற மகனை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக தாக்கிய வீடியோ இருந்தது தெரியவந்தது. இந்த வீடியோ வெளியாகி பரவிய நிலையில்,  துளசி மீது வடிவழகனும், அவரது குடும்பத்தாரும் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், ராம்பள்ளி பகுதியில் இருந்த துளசியை கைது செய்துள்ளனர். இப்போது குழந்தைகள் 2 பேரும் தந்தையின் பராமரிப்பில் உள்ளதாக கூறப்படும் நிலையில்,  இந்த கொடூர சம்பவம் பலரின் மனங்களை உலுக்கி எடுக்கும் வகையிலேயே உள்ளது. தந்தி டிவி செய்திகளுக்காக செஞ்சியில் இருந்து செய்தியாளர் பூமிநாதன்...

Next Story

மேலும் செய்திகள்