கொரோனாவால் செவிலியர் உயிரிழப்பு - கண்ணீருடன் தவிக்கும் 3 பெண் பிள்ளைகள்

விபத்தில் தந்தையை இழந்து, தாயுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில், கொரோனாவால் செவிலியரான தன் தாயையும் பாட்டியையும் இழந்து தவிக்கின்றனர், 3 பெண் பிள்ளைகள்.
x
கண்ணுக்குத் தெரியாத கொரோனா. மூச்சு முட்ட வைக்கும் பிபிஇ கிட். கண்முன்னே உயிர்கள் பறி போவதால் ஏற்படும்  மன அழுத்தம் ஆகியவற்றுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு மருத்துவரும் செவிலியரும்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

விபத்தில் கணவரை இழந்த செவிலியர் எழிலரசி தன் 3 பெண் பிள்ளைகளுடன், தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார். கொரோனா காலத்தில் தான் மருத்துவர்களும் செவிலியர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றனரே. அப்படித்தான் எழிலரசியும் தன் பிள்ளைகள் பாசத்தால் வற்புறுத்தியும் வீட்டில் இருக்காமல், கடமையே முக்கியம் என கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்ற சென்றுள்ளார்.

எழிலரசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரக்கமற்ற கொரோனா மே 24ஆம் தேதி எழிலரசியின் உயிரைப் பறித்துக் கொண்டது. தன் மகளுக்கு உதவியாய் மருத்துவமனைக்கு சென்றிருந்த எழிலரசியின் தாயார் பாப்பம்மாளும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, எழிலரசி இறந்த அடுத்த நாளே உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, செவிலியரும் அவரது தாயும் அடுத்தடுத்த நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. 15 ஆண்டுகள் செவிலியப் பணியில் இருந்த தன் மகளும், உதவியாய்ச் சென்ற மனைவியும் கொரோனாவால் பலியானதால், தற்போது 3 பிள்ளைகளையும் தனி ஆளாக தான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் தவித்து வருவதாக எழிலரசியின் தந்தை தமிழ்மாறன் வேதனையுடன் தெரிவித்தார்.

தாயையும் பாட்டியையும் இழந்த மீள முடியா சோகத்திலும், எழிலரசியின் மூத்த மகள் ஹரிணியோ, "மக்கள் ஒற்றுமையாக இருந்தால் கொரோனாவிலிருந்து மீண்டு விடலாம்" என்று கண்ணீருடன் சொல்கிறார்.

பொதுமக்களின் அலட்சியத்தால், இப்படி எத்தனையோ செவிலியர்களின் பிள்ளைகள் நிற்கதியாய் நிற்கின்றனர்... இந்தப் பெண் பிள்ளைகளின் கண்ணீருக்கு பதில் சொல்ல, ஒன்றிணைந்து கொரோனாவை வீழ்த்த வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்