நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும், வரும் நவம்பர் 30 வரை, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 30-ல் அறிவிக்கப்பட்ட கொரோனா பொது முடக்க தளர்வுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்தை பொறுத்த வரை மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட விமான போக்குவரத்தை தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திரையரங்குகள் போன்றவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறை தொடர்கிறது.
நீச்சல் குளங்கள் போன்றவை விளையாட்டு வீரர், பயிற்சி நோக்கங்களுக்காக மட்டுமே திறக்கப்படலாம் என்பதும் தொடர்கிறது.
சமூக கலாசார அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மூடிய அறைகளில் 50 சதவீத கொள்ளளவு உடன் மட்டும் அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை தொடர்கிறது.
மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலத்திற்குள் பொது மக்கள் நகர்வு மற்றும் போக்குவரத்திற்கு பிரத்தியேக அனுமதியோ, இ-பாஸ் எதுவும் தேவை இல்லை என உள்துறை அமைச்சகம் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
மாநில அரசுகள் தனியாக உள்ளூர் பொது முடக்கம் எதுவும் அறிவிக்கக் கூடாது என்றும்,
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பொது முடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story