பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது - மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு டாக்டர் என கூறி சிகிச்சை அளித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது - மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி
x
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். 41 வயதான இவர், பி.ஏ. வரலாறு பட்டதாரி. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்த அவர், ஆராஞ்சி மெயின் சாலையில் வளையல் கடை ஒன்றை நடத்தி வந்தார். 

வளையல் கடையில் என்ன வருமானம் வந்து விடப் போகிறது? பெருசா ஏதாவது சாதிக்கணும் என திட்டம் தீட்டிய அவருக்கு டாக்டராக மாற வேண்டும் என ஆசை. நீட் தேர்வு எழுதி பாஸாகி, படித்து தான் டாக்டராக வேண்டுமா என்ன? வளையல் கடைக்குள் ஒரு தடுப்பு பலகையை வைத்து டாக்டர் என சொல்லி ஒரு போர்டை வைத்தார். அவ்வளவு தான் மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. 

சாதாரண தலைவலி தொடங்கி காய்ச்சல் என யார் வந்தாலும் அவர்களுக்கு மாத்திரைகளை எழுதி கொடுத்து பக்காவான டாக்டராகவே மாறிப்போனார் அன்பழகன்.. மருந்து மாத்திரைகளை எல்லாம் குத்து மதிப்பாக தெரிந்து வைத்துக் கொண்டு அவர் எழுதிக் கொடுத்ததை நம்பிய மக்களும் நாளடைவில் கைராசியான டாக்டர் இவர் என நம்ப தொடங்கினர். 

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் மருத்துவராகவே ஏரியாவில் சுற்றி வந்தார் அன்பழகன். இந்த சூழலில் தான் போலி டாக்டர்கள் ஏரியாவில் அதிகம் இருப்பதாக மருத்துவ இணை இயக்குநர் வசந்தரூபனுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் தலைமையிலான குழு சோதனைக்கு சென்ற போது நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே பிடிபட்டார் பி.ஏ. (B.A) பட்டதாரியான அன்பழகன். 

இதேபோல் கீழ்பென்னாத்தூர் சாலையில் பி.பார்ம் படித்து விட்டு மெடிக்கல் ஷாப் நடத்தி வந்த ஜீவா என்பவரும் தன்னை டாக்டர் என கூறி மக்களை நம்ப வைத்துள்ளார். இவரும் 5 ஆண்டுகளாக டாக்டராக இருந்ததும் தெரியவந்ததது. அதிகாரிகள் வருவதை அறிந்து தலைமறைவான ஜீவாவை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்