கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் அரசு மருத்துவமனையில் 25வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த 20ம்தேதி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.அவரது ரத்தமாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பெண் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார். அவரது செல்போனை வாங்கி மருத்துவ தூய்மை பணியாளர்கள் 2பெண்கள் ஒரு ஆண் என 3பேர் பயன்படுத்தியதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேரையும் பணியிடை நீக்கம் செய்துள்ள அதிகாரிகள், அந்த 3பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 14 நாட்கள் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் டிக்டாக் பதிவிட்டுள்ளது, அதை பயன்படுத்திய 3பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story