காதல் திருமணம் செய்த இளைஞர் மர்ம மரணம் - காதலியின் உறவினர்கள் தூக்கிலிட்டதாக குற்றச்சாட்டு
காதல் திருமணம் செய்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சின்ன கருப்பு என்ற இளைஞர், ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, காதல் திருமணம் செய்து கொண்டு, காரியாபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெண்ணிற்கு திருமண வயது இல்லாததால், பின்னர் திருமணம் செய்து கொடுப்பதாக பேசி, பிரித்து வைத்தனர். அந்தப் பெண், தற்போது தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இளைஞர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதாக கூறியபோது, அந்தப்பெண் மறுத்துள்ளார். இந்நிலையில், இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை சமூக வலை தளத்தில், அவர் வெளியிட்டார். இதனால், பெண்ணின் உறவினர்கள் இளைஞரை தேடி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், வேப்பங்குளம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் சின்ன கருப்பு சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இளைஞரை அடித்துக்கொன்றதாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story