தனியார் பள்ளி தாளாளரிடம் ரூ.1.26 கோடி மோசடி : திரைப்பட தயாரிப்பாளர் மகனுடன் கைது
கடன் வாங்கி தருவதாக, ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கியை சேர்ந்த பள்ளி தாளாளர் ரமேஷ், பள்ளி மேம்பாட்டுக்காக 18 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்ட நிலையில், காரைக்குடியை சேர்ந்த சண்முகநாதன் மற்றும் ராமநாதனை அணுகினார். பாகனேரியை சேர்ந்த காளையப்பன் கடன் வாங்கி தருவார் என்றும், அதற்கு 7 சதவீதம் கமிசன் தர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, காளையப்பனை சந்தித்த ரமேஷ், கமிசன் தொகையான ஒரு கோடியே 26 லட்சம் ரூபாயையும் பல தவணைகளில் கொடுத்தார். பணத்தை பெற்று கொண்ட காளையப்பன், பேசியபடி கடனை வாங்கித் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் இருந்தார். இதுகுறித்து, ரமேஷ், மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, காளையப்பன், சண்முக நாதன், ராமநாதன், சரவணன் மற்றும் காளையப்பன் மகன் ஐயப்பன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், காளையப்பன் மற்றும் அவரது மகன் ஐயப்பனை, போலீசார் கைது செய்தனர்.
Next Story