மதுபோதையில் விடிய, விடிய ஆபாச நடனம் - 16 பேர் கைது...

பொள்ளாச்சி, மகாபலிபுரத்தை தொடர்ந்து, விழுப்புரம் அருகே ஆட்டம் பாட்டத்துடன் மதுவிருந்தில் ஈடுபட்ட 16 பேரை ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் விடிய, விடிய ஆபாச நடனம் - 16 பேர் கைது...
x
ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் முந்திரி தோப்பில், இசை நிகழ்ச்சி என்ற பெயரில், மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுடன், நள்ளிரவில், ஆபாச நடனம் நடப்பதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வேகமாக அங்கு சென்ற காவலர்கள், அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். போலீசாரைக் கண்டதும், மது விருந்தில் பங்கேற்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். போதையில் இருந்த16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள், உயர் ரக மதுபானங்கள், இசை கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், விருந்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெளிநாட்டினரிடம் விசாரணை நடத்திய போலீசார், எச்சரிக்கை செய்து அவர்களை விடுவித்தனர். 

கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை, மணப்பாக்கத்தை சேர்ந்த யுவராஜ், அவரது நண்பர்கள் மூவர் சேர்ந்து சட்டவிரோத மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது. ஆன்லைன் மூலம், 'ஆரோரா' என்ற பெயரில், விளம்பரம் செய்து, டிக்கெட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். கைதான 16 பேர் மீது, சட்டவிரோதமாக கூடுதல், ஆபாச நடனமாட ஏற்பாடு செய்தல், அன்னிய மதுபான வகைகளை பதுக்கி விற்பனை செய்தல் உள்ளிட்ட எட்டு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, மகாபலிபுரத்தை தொடர்ந்து, விழுப்புரத்திலும் தலைதூக்கிய மதுவிருந்து கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்