பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்

கோவையில் காணாமல் போன கல்லூரி மாணவி பொள்ளாச்சி அருகே கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
பொள்ளாச்சி அருகே  பூசாரிபட்டி வாய்கால்மேடு பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், இளம்பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாண நிலையில் கிடந்தது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கொல்லப்பட்டு  கிடந்த அந்தப்பெண், கோவையில் காணாமல் போன கல்லூரி மாணவி பிரகதி என்பது  தெரிய வந்தது. திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகள் பிரகதி, கோவையில் அரசு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் காணாமல் போனதாக கோவை காட்டூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பிரகதி, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் மாணவி பிரகதிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் கொடூர கொலை சம்பவம் அவரின் குடும்பத்தினரை  பெரும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.  

நேற்றிரவு 11 மணிக்கு கல்லூரி மாணவி பிரகதியின் சடலம், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, உடல் பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரகதி உடல் முழுதும் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.கல்லூரி மாணவி பிரகதி கொடூர கொலை குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்படி, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.பிரகதியின் கல்லூரி நண்பர்கள், உடல் கிடைத்த இடத்தின் அருகே இருப்பவர்கள் என பலரிடம் விசாரணையை தனிப்படை போலீசார் தொடங்கியுள்ளனர்.  

மாணவி பிரகதியின் செல்போன் தகவல்கள் மற்றும்,  உடல் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனரா? ஒருதலை காதலால் கொலை சம்பவம் அரங்கேறியதா? போன்ற கோணங்களில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.இளம்பெண்களை பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறி, நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நிலையில், மாணவி பிரகதியின் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்