10 ஆண்டுகள்... 8 ஆயிரம் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக போலியாக ஸ்கேன் சென்டர் நடத்தியதோடு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியாக ஸ்கேன் சென்டர் நடத்தி குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதோடு, கருக்கலைப்பு சம்பவங்களும் நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை நடத்திய அதிரடி சோதனையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட ஆனந்தி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்தி வந்த ஸ்கேன் சென்டரில் கருக்கலைப்பு செய்யப்படுவது உறுதியானதை தொடர்ந்து சென்டருக்கும் சீல்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த ஆனந்தி மற்றொரு பகுதியில் இதுபோல் முறைகேட்டில் ஈடுபடுவதாக மீண்டும் தகவல் வெளியானது. இதையடுத்து ஆனந்தியின் நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிக்க தொடங்கினர். அப்போது திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிக்கால் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்யப்படுவது உறுதியானது.... 

இதையடுத்து அங்கு சோதனைக்கு சென்ற மருத்துவ பணிகள் துணை இயக்குநர் தலைமையிலான குழு, தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது கருக்கலைப்பு செய்ய வருவோரை மறைவாக வைத்திருக்க ஏதுவாக சிறிய அளவிலான அறைகளை உருவாக்கி இருப்பதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்வதற்காக 6 ஆயிரம் ரூபாய் வாங்குவதும், கருக்கலைப்பு செய்வதற்கு அவரவர் வசதிக்கு ஏற்றார் போல 20 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை வசூலிப்பதும் தெரியவந்தது. திருவண்ணாமலையில் கருக்கலைப்பு செய்வதற்காக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவது தெரியவந்தது. 

இதற்காக பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் இருப்பதும், அவர்கள் கமிஷனை பெற்றுக் கொண்டு இங்கு வாடிக்கையாளர்களை அழைத்து வருவதும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது... கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசுக்களை கருவிலேயே இவர்கள் அழித்தது விசாரணையில் தெரியவந்தது... 

ப்ளஸ் 2 முடித்த பிறகு டிப்ளமோ நர்சிங் முடித்த ஆனந்தி ஸ்கேன் சென்டர் தொடங்கி இதுபோல் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு உடந்தையாக கணவர் தமிழ்செல்வன், வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கு உதவியாக ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்துள்ளனர். 

ஏற்கனவே சீல் வைத்த பிறகு, மீண்டும் அதுபோல் குற்றச் செயல்களை தொடர்ந்து செய்து வந்த ஆனந்தி உள்ளிட்ட 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்... 

Next Story

மேலும் செய்திகள்