தாய் மதத்துக்கு மாறியவருக்கு ஆசிரியர் நியமனம் சரியே - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2003 - 2004 -ல் இளநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட போது, மேகலை என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் விண்ணப்பித்துள்ளார். அந்த பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் மேகலை பெற்று இருந்தார். ஆனாலும் மேகலை தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
* கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதால் அவரை தாழ்த்தப்பட்ட பிரிவினராக கருத முடியாது என்று தெரிவித்து, அவருக்கு பணி நியமனம் வழங்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்தும், தனக்கு பணி நியமனம் வழங்க கோரியும் மேகலை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், 2005 -ல் மேகலைக்கு பணி நியமனம் ஆணை வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
* இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்துவாக மாறிய மேகலைக்கு சலுகை வழங்க முடியாது என வாதிட்டார்.
* அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி,கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் உள்ளூர் மக்களிடம் தீவிரமாக விசாரித்த பிறகே, மேகலைக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறி, மேகலை நியமனத்தை உறுதி செய்து உத்தரவிட்டார்.
Next Story