ஜிம்பாப்வே அணிக்கு தடை - வீர‌ர்கள் அதிர்ச்சி

ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை விதித்துள்ள ஐசிசி, சர்வதேச கிரிக்கெட்டில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு தடை - வீர‌ர்கள் அதிர்ச்சி
x
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த‌து. இதுகுறித்து லண்டனில் நேற்று நடைபெற்ற ஐ.சி.சி ஆண்டு இறுதி குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், ஜிம்பாப்வே அணி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான ஜிம்பாப்வே அணி வீர‌ர்கள் பலரும், தொடர்ந்து தங்களது அதிருப்தி குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜிம்பாப்வே அணிக்கு ஆதரவாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். 

மற்றொரு முக்கிய முடிவு, விளையாட முடியாத அளவிற்கு காயம் அடையும் வீர‌ர்களுக்கு, மாற்றாக வீர‌ர்கள், பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாற்றுவீர‌ராக களமிறங்கும் வீர‌ர்கள் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த‌து. நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் ஜோபர் ஆர்ச்சர் வீசிய பந்தில்,  ஆஸ்திரேலிய வீர‌ர் அலேக்ஸ் ஹேரியின் ஹெல்மட் பறந்த‌து. தாடையில் காயம் ஏற்பட்டும், மாற்றுவீர‌ருக்கு பேட்டிங் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் அவர் தொடர்ந்து பேட் செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதுபோன்ற நெருக்கடி நிலைகளை சமாளிக்கவும், வீர‌ர்களின் நலன் கருதியும் மாற்றுவீர‌ர்களுக்கு பேட்டிங் செய்யவும் பந்துவீசவும் அனுமதிக்க வேண்டும் என பல நாடுகளும் ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதேபோல விதிமீறல்களுக்காக இனி கேப்டன்கள் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. அணியில் ஏதேனும் விதி மீறல்கள்  நடந்தால், அணியில் உள்ள ஒவ்வொரு வீர‌ரும் பொறுப்பேற்க வேண்டும் என ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்