தடகளத்தில் தங்கம் வென்று வரும் மூதாட்டி - 102 வயதிலும் தளராத சாதனை முயற்சி

மிகச் சிறந்த தடகள வீராங்கனை
தடகளத்தில் தங்கம் வென்று வரும் மூதாட்டி - 102 வயதிலும் தளராத சாதனை முயற்சி
x
இவர் தான், மான் கவுர் (Man Kaur)... பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவைச் சேர்ந்த இவருக்கு, வயது 102 ஆகிறது. இவர், தமது 93-வது வயதில் தான், தடகள பயிற்சி பெற தொடங்கினார். தமது 102 வயதில், மிகச் சிறந்த தடகள வீராங்கனை ஆகிவிட்டார். ஆரம்பத்தில், நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்த தொடங்கியவர் குறுகிய காலத்திலேயே, போட்டிக் களத்தில் பிரகாசிக்க தொடங்கி விட்டார். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மான் கவுரை ஊக்கப்படுத்து வருவது அவரது மகன், குர்தேவ். 78 வயதாகும் இவரும் தடகள வீரர் தான். முதுமையிலும் தாயார் உடல் வலிமையுடன் இருப்பதை கவனித்தவர், பயிற்சி அளித்து முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்க வைத்துவிட்டார். குர்தேவ், உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தாயாருக்கும் பிரத்யேக பயிற்சி அளித்து அந்த போட்டிகளில் பங்கேற்க வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.  சமீபத்தில், ஸ்பெயினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100-104 வயது பிரிவில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மான் கவுர் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். ஏற்கனவே கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நடந்த போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர், தற்போதும் சாதித்து விட்டார். தொடர்ந்து இரண்டுமுறை தங்கப்பதக்கம் வென்றிருக்கும் மான் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இவருக்கு, எந்தவிதமான உடல் நலக் குறைபாடும் வந்ததில்லை. 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை முதல் முயற்சியிலேயே 1 நிமிடம் 1 விநாடியில் கடந்துவிட்டார். அதனால் அவரால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடிந்தது.

Next Story

மேலும் செய்திகள்