பயமா எனக்கா? - விஜயகாந்த் பாணியில் விஜயபிரபாகரன் அரசியல் பிரவேசம்

தே.மு.தி.க. கட்சியை உருவாக்கிய நடிகர் விஜயகாந்த்-ன் மகன் விஜய பிரபாகரனின் அரசியல் வருகை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
x
தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்கள் ஆட்சியில் இருந்தபோதே அரசியலில் களம் இறங்கியவர் விஜயகாந்த். சினிமா சீனியர்கள் கமல், ரஜினியின் அரசியல் சீனியர் விஜயகாந்த். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தேமுதிகவை தூக்கி நிறுத்தி கோபாலபுரத்தையும், போயஸ் கார்டனையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

அதிமுக உடன் கூட்டணி அமைத்து, தமிழக அரசின் எதிர்கட்சி தலைவர் வரை உயர்ந்த விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் கட்சிப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் அவரால் பங்கேற்க முடியவில்லை. தற்போது தேமுதிகவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். அவரது மனைவியான பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்கு ஏற்ப விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணியில் விரைவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பேட்மிட்டன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர், சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். மேலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் நாய்களையும் வளர்த்து வருகிறார்.

சமீபகாலமாக கட்சி நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்களில் அவர் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறார். இதனால், தனது மூத்த மகன் விஜய பிரபாகரனை, விஜயகாந்த் அரசியலில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தே.மு.தி.க.வின் 14-ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், முதல் பேச்சிலேயே தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும் என்று அரசியல் அனல் பறக்க பேசினார். அதேபோல் அரசியலில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டையில்  நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், தேமுதிக சார்பில் பங்கேற்ற விஜய பிரபாகரன் நலத்திட்டங்களை வழங்கினார். அப்போதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெளிப்படையாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்தார்

இதனால் கிட்டத்தட்ட தேமுதிகவில் விஜயபிரபாகரனின் வருகை உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், அதுபற்றி விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்