அழகிரி கோட்டையில் ஸ்டாலின் அதிரடி...

திமுகவின் பெரும்பாலான தென்மாவட்ட நிர்வாகிகளை மாற்றி அறித்துள்ளது அக்கட்சி தலைமை. இது அழகிரி கோட்டையில் ஸ்டாலினின் அதிரடி என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரி கோட்டையில் ஸ்டாலின் அதிரடி...
x
"அழகிரி கோட்டையில் ஸ்டாலின் அதிரடி"

இன்னும் சில நாட்கள், ஒரு வாரம், மாதம், என  தமிழக அரசுக்கு கெடு வைத்து தி.மு.க. கூட்டங்களிலும், தொண்டர்கள் மத்தியிலும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் பேசி  உற்சாகப்படுத்தி வருகிறார். ஸ்டாலின் தி.மு.க.வின் செயல் தலைவராக பதவியேற்று ஒரு வருடத்தை கடந்த நிலையில் ஓசை படாமல் அவர் எடுத்த நடவடிக்கைகள் அக்கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது என்பது தி.மு.க. அனுதாபிகளின் கருத்து.

தி.மு.க.வின் மாவட்ட கழகங்கள் பரிந்துறைக்கும் நிகழ்ச்சிகளுக்கு மறுப்பு சொல்லாமல் கலந்து கொள்வது ஸ்டாலின் வழக்கம். அப்படி கலந்து கொண்டபோது தொண்டர்களின் மன ஓட்டத்தை அறிந்து கொண்ட ஸ்டாலின் அனைவரையும் சந்திக்க முடிவெடுத்தார். அதன் ஒரு அங்கம்தான் அறிவாலயத்தில் அவர் நடத்திய கள ஆய்வு. கள ஆய்வின் முடிவில் மாநிலம் முழுவதுமுள்ள தி.மு.க. நிர்வாகிகள் பலரை நீக்கினார், புதியவர்களை இணைத்தார். கள ஆய்வின் போதே தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில்  குழுவை அமைத்தார் ஸ்டாலின். தி.மு.க.வின் மாவட்ட எல்லைகளை திருத்தம் செய்ய பாலு பரிந்துறைக்க அதையும் தற்போது செயபடுத்தத் துவங்கியிருக்கிறார் தி.மு.க.வின் செயல் தலைவர். 

டி.ஆர்.பாலு குழுவின் பரிந்துறைகளை செயல்படுத்தும் முன் கட்சியின் நலன் கருதி, முதல் கட்டமாக  தென் மாவட்ட நிர்வாகிகளை நீக்குகிறோம் என நேற்று முன் தினம் திருச்சியில் தெரிவித்தார் ஸ்டாலின். இதன் படி  தென் மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டது தி.மு.க. இரண்டு மாவட்டங்களாக இருந்த மதுரையை மாநகர் மாவட்டம் என்ற பெயரில் ஒரே மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

மதுரை நிர்வாகம் எப்போதுமே தி.மு.க.வுக்கு கடந்த காலங்களில் சவாலாகத்தான் இருந்துள்ளது. இதுவரை தளபதி மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். அழகிரி பரபரப்பு அரசியலில் பங்கெடுத்திருந்தபோது அவருக்கு பின்னால் அணிவகுத்தவர் என்ற விமர்சனம் இவர் மீது இருந்தாலும், தற்போது தளபதிதான் மதுரை தி.மு.கவின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கீழ் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தின் மகன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இருக்கும் உறுப்பினரான வேலுச்சாமி இதுவரை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர். இவர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென் மாவட்ட தி.மு.க.வின் இன்னொரு இன்னொரு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ள மாவட்டம் தேனி. அங்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஜெயக்குமார் நீக்கப்பட்டு கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வான  அவர் ம.தி.மு.க.விலிருந்து வந்தவர். 2009ல் ம.தி.மு.க.விலிருந்து விலகி அழகிரியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தவர் ராமகிருஷ்ணன். இதே போல் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுப.தங்கவேலனின் மகன் திவகரன் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்தார். இவர் விடுவிக்கப்பட்டு அப்பொறுப்பில் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறது தி.மு.க. இந்த மாவட்டங்களின் ஒன்றிய செயாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் இந்த நடவடிக்கை களையெடுப்பா? புது ரத்தம் பாய்ச்சலா? என்பது போகப் போகத்தான் தெரியும்.



Next Story

மேலும் செய்திகள்