இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்... ரவி சாஸ்திரி பதவிக்காலம் விரைவில் முடிகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமனம் செய்யும் முடிவுக்கு பிசிசிஐ வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்... ரவி சாஸ்திரி பதவிக்காலம் விரைவில் முடிகிறது
x
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும், 20 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், அனில் கும்ப்ளேவை நியமிக்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளே கடந்த 2016-17ம் ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.

கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் தலைவராக சச்சின், லட்சுமண் மற்றும் கங்குலி இருந்த போது கும்ப்ளே நியமனம் செய்யப்பட்டார். ஆனால் கேப்டன் விராட் கோலியுடன் கும்ப்ளேவிற்கு மனக்கசப்பு தொடர்வதாக கூறப்பட்டது.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதும், கும்ப்ளே பதவியைவிட்டு விலகினார்.  தற்போது, விராட் கோலி 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலையில், அனில் கும்ப்ளே, அணிக்கு மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி, அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய விவகாரத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார். கோலியின் நெருக்கடியால் தான் கும்ப்ளே பதவி விலகினார் என்பது கிரிக்கெட் ஆலோசனை குழுவுக்கு தெரியும் எனக் கூறியிருக்கும் அவர்,  இனி இந்நிகழ்வு முன்னுதாரணமாக இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், கும்ப்ளேவுக்கு அடுத்தப்படியாக சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் வி.வி.எஸ். லட்சுமணை பயிற்சியாளரை நியமிக்கவும் முயற்சி எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் கும்ப்ளே மற்றும் லட்சுமண் எடுக்கும் முடிவை பொறுத்தே பயிற்சியாளர் நியமனம் இருக்கும் என்றும் ரவிசாஸ்திரி பதவிகாலம் முடிந்ததும் யார் தயாராக இருக்கிறாரோ அவருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தவரை,  உள்ளூர் வீரர்களை பயிற்சியாளர்களாக நியமனம் செய்யவே முன்னுரிமை வழங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் சாதனைகள் பல படைத்த அனுபவ வீரர்களில் இவர்களில் யார் வந்தாலும், அணிக்கு பலமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்