சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரி சண்டே மார்க்கெட்

புதுச்சேரியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் இயங்கி வரும் சண்டே மார்க்கெட் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரி சண்டே மார்க்கெட்
x
புதுச்சேரிக்கு இருக்கும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் சண்டே மார்க்கெட். காரணம் இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்கள் மலைமலையாக குவித்து வைக்கப்பட்டிருப்பது தான். 

புதுச்சேரி மாநிலத்தின் பிரதான பகுதியான நேரு வீதி, காந்தி வீதியில் இந்த சந்தை செயல்படுகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த சந்தைக்கு ஆந்திரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் நிரந்தர வாடிக்கையாளர்களே. 

பார்ப்பதற்கு சென்னை ரங்கநாதன் தெரு போலவே காட்சி தரும் இந்த சந்தையில் வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என எல்லாம் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும்  வாகன உதிரி பாகங்களும்  இங்கு மலிவாக வாங்கிச் செல்ல முடியும். பயன்படுத்திய பொருட்களை பாதி விலைக்கு விற்பனை செய்ய வருவோரும் இங்கு உண்டு என்பதால்  அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை கூட குறைவான விலையில் வாங்கும் இடமாக இது இருக்கிறது.

நடந்து கொண்டே இருக்கலாம் எனும் அளவுக்கு 2 கிலோ மீட்டர் தூரத்தையும் தாண்டி இந்த சந்தை செயல்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கும் இந்த சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் திருவிழா கோலம் போல காட்சி தரும் இந்த சந்தையில் தீபாவளி, பொங்கல் நேரத்தில் சிறப்பு விற்பனை ஒரு வாரம் வரை நடக்குமாம். 

புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் சண்டே மார்க்கெட்டையும் சுற்றிப் பார்க்க தவறுவதில்லை. அந்த அளவுக்கு மக்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு இடமாக இருக்கிறது புதுச்சேரி சண்டே மார்க்கெட் மழைக்காலம், வெயில் காலம் என தட்ப வெப்ப சூழலையும் தாண்டி மக்கள் பேராதரவோடு செயல்படுகிறது இந்த சந்தை.

Next Story

மேலும் செய்திகள்